சாராயக் கடை திறக்கப்பட்ட அன்றே மூடுவிழா! மக்கள் கூட்டத்தை பார்த்து பின்வாங்கிய டாஸ்மாக் அதிகாரிகள்...
ஈரோட்டில் டாஸ்மாக் சாராயக் கடைக்காக புதிதாக கட்டிடம் திறக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்து திரண்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூர் அருகே கருமாண்டாம்பாளையத்தில் டாஸ்மாக் சாராயக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு இடவசதி இல்லை என்று கூறி அந்த டாஸ்மாக் சாராயக் கடையை இடமாற்றம் செய்ய முடிவு எடுத்தார் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்.
இடமாற்றம் செய்யப்படும் டாஸ்மாக் சாராயக் கடையை சோளங்காபாளையம், பாசூர் செல்லும் பிரிவு சாலையில் வைக்க ஏற்பாடுகளை செய்தனர். இதற்காக அங்கு புதிதாக கட்டிடமும் கட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சாராயக் கடையைத் திறக்க அதிகாரிகள் நேற்று மதியம் அங்கு வந்தனர். அப்போது புதிதாக சாராயக் கடை திறக்கப்படுகிறது என்று தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
திரளாக மக்கள் கூடியதால் இதுகுறித்து உ டனே மலையம்பாளையம் காவல் நிலையத்திற்கு டாஸ்மாக் அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவலாளர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மக்கள் போராட்டத்தின் வீரியத்தை அறிந்து கொண்ட அதிகாரிகள், "இங்கு டாஸ்மாக் சாராயக் கடை திறக்கப்படாது" என்று உறுதியளித்தார்.
இதனைக் கேட்டு அமைதியடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். திரண்ட மக்களின் போராட்டத்தால் இங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.