பணி நிரந்தரம் செய்யக்கோரி துப்புரவு பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்....
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு யு.சி.பி.ஐ. வட்ட செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினார். வட்ட தலைவர் ராமன் வரவேற்றார். மாநில தலைவர் பட்டாபிராமன், மாநில செயற்குழு உறுப்பினர் முருகேசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
100-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், "ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் துப்புரவு தொழிலாளர்கள் 500 -க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.205 ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது துப்புரவு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் புதுவாழ்வு திட்டம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு இதுவரை வழங்கி வந்த ரூ.205 கூலியை குறைத்து ரூ.86 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவற்றை ஏற்று கொள்ளாதவர்களை வேளையில் இருந்து நீக்கி விடுவதாகவும் அச்சுறுத்தப்படுகிறது.
100 நாள் திட்டத்தையும் தற்போது திணிக்கப்பட உள்ள புதுவாழ்வு திட்டத்தையும் நடைமுறைபடுத்தாமல், துப்புரவு தொழிலாளர்களை தினக்கூலி அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.
அரசு அறிவித்துள்ள ஊதிய அடிப்படையில் ஊதியம் வழங்கி துப்புரவு பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.