பேருந்து ஓட்டுநர் விவகாரம்.! அரசு அறிவிப்பில் நம்பிக்கை இல்லை- கூட்டணி கட்சிக்கு எதிராக களம் இறங்கும் சிஐடியு
போக்குவரத்து துறையில் வெளிமுகமை மூலம் ஊழியர்கள் எடுக்கும் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக போக்குவரத்து துறை உறுதி அளித்துள்ளதாகவும், ஆனால் அரசு அறிவிப்பில் நம்பிக்கை இல்லை ஏதோ ஒரு வகையில் வெளிமுகமை மூலம் காலி பணியிடங்களை நிரப்ப அரசு தீர்மானமாக உள்ளதாக சி.ஐ.டி.யூ தொழிற்சங்க மாநில தலைவர் சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து துறையில் தனியார்மயம்
மாநகர போக்குவரத்து கழக பணிமனைகளில் பணிபுரிவதற்காக தனியார் நிறுவனம் சார்பில் 500 ஓட்டுநர்களை தனியார் நிறுவனம் மூலம் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 3 தினங்களுக்கு முன்பு திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாலை நேரத்தில் பணி முடிந்து வீடு பொதுமக்கள் வீடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து வேலை நிறுத்த போராட்டத்தை திரும்ப பெறப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் சிஐடியுவும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. போக்குவரத்து துறையில், ஓட்டுநர்களை வெளிமுகமை மூலமும், ஒப்பந்த அடிப்படையிலும் எடுக்க போக்குவரத்து துறை முடிவு செய்து அதற்கான டெண்டரும் கோரியது.
முத்தரப்பு பேச்சுவார்த்தை
இதற்கு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யூ) சார்பில் மாநகரப் போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக மேளாண் இயக்குனரை சந்தித்து வேலை நிறுத்த போராட்டத்திற்கான நோட்டீஸ் வழங்கியது. இந்நிலையில், சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தொழிலாளர் நல சிறப்பு இணை ஆணையர் வேல்முருகன் தலைமையில் முத்தரப்பு சமரச பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. பேச்சுவார்த்தையில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்க பிரதிநிதிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஓப்பந்த அடிப்படையில் வேலை
சுமார் ஒரு மணி நேரம் நடைப்பெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சி.ஐ.டி.யூ சங்க மாநில தலைவர் சவுந்திரராஜன், இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறையின் அறிவுரைக்கிணங்க, வெளிமுகமை மூலம் காலி பணியிடங்களை நிரப்பும் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக போக்குவரத்து துறை உறுதி அளித்திருப்பதாக கூறினார். போக்குவரத்து துறையின் அறிவிப்பு தங்களுக்கு சாதகமாக கருதினாலும், அரசு ஏதோ ஒரு விதத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலி பணியிடங்களை நிரப்ப தீர்மானமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வரும் ஜூன் 9 ஆம் தேதி அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறும் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்