சென்னை வந்தனர் டெல்லி போலீசார் - டிமிக்கி கொடுத்து பெங்களூர் பறந்தார் டிடிவி தினகரன்...
இரட்டை இலைக்காக லஞ்சம் அளித்த புகாரின் கீழ் டிடிவி.தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை செய்ய டெல்லி சிறப்பு போலீசார் சென்னை வந்துள்ளனர். ஆனால் எஸ்கேப் ஆகி சசிகலாவை சந்திக்க டிடிவி பெங்களூர் சென்றுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் உச்ச கட்ட குழப்பங்கள் நிலவி வருகிறது. அதுவும் அதிமுகவில் சொல்லவே தேவையில்லை. எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் என அனைவரும் பதவிக்கு ஆசைப்பட்டு பல புகார்களில் சிக்கி வருகின்றனர்.
இன்று அதிகாலை டெல்லியில் சுகேஷ் சந்திரா என்ற நபர் டெல்லி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர தினகரன் 60 கோடிக்கு பேரம் பேசியதும் அதற்காக 1.30 கோடி ரூபாய் முன் பணம் கொடுத்ததும் தெரியவந்தது.
மேலும், கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திராவும், டிடிவி தினகரனும் பேசிக் கொண்ட தொலைபேசி உரையாடலை கைப்பற்றி உள்ளதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார். உரிய ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில் டிடிவி தினகரன் எப்போது வேண்டுமேனாலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுகேஷ் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் டெல்லியில் இருந்து சிறப்பு போலீசார் டிடிவி தினகரனை விசாரிக்க சென்னை வந்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க ஆட்சியை தக்க வைத்து கொள்ளவும் கட்சியில் நிலைத்து நிற்கவும் அதரவு கேட்டு சசிகலாவை சந்திக்க தினகரன் பெங்களூர் சென்றுள்ளார்.
ஆனால் அங்கு சசிகலாவை சந்திக்கவில்லை. கைதியை பார்பதற்கு மாலை 5 மணிக்குள் சிறைத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்பது வரைமுறை.
ஆனால் சிறைதுறையிடம் மாலை 5 மணிக்குள் அனுமதி பெறாததால் தினகரன் சசிகலாவை இன்று சந்திக்கவில்லை.
மேலும் நாளையும் சசிகலாவை சந்திப்பது சந்தேகமே. காரணம் சிறை விதிகளின்படி, திங்கள், புதன், வெள்ளி மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி தரப்படும். எனவே நாளைய சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் சிறை வட்டாரத்தில் இருந்து வரவில்லை.
உண்மையிலேயே கட்சியில் நிலைபெற சசிகலாவை சந்திக்க சென்றாரா அல்லது டெல்லி போலீசாரிடம் இருந்து எஸ்கேப் ஆக சென்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.