பரங்கிமலையில் காவு வாங்கிய சுவர்...பறிபோன உயிர்கள்...பரபரப்பு தகவல்!
சென்னை பரங்கிமலை ரயில் விபத்து தொடர்பாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பரங்கிமலையின் 4-வது வழித்தடத்தில் மின்சார ரயிலை இயக்கியதுதான் உயிரிழப்புக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. எப்போது 4-வது நடைமேடை என்றாலே வெளியூர்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்வது வழக்கம். ஆனால் மாம்பலம்-கோடம்பாக்கம் இடையே உயர் மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததால் இன்று 4வது வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டது.
4வது வழித்தடத்தில் தண்டவாளத்தின் அருகே தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை-திருமால்பூர் விரைவு ரயில் இன்று காலை சென்றுக்கொண்டிருந்தது. கூட்ட நெரிசல் காரணமாக அதில் ஏராளமான பயணிகள் தொங்கிக்கொண்டு சென்றனர். பரங்கிமலை ரயில் நிலையம் அருகே வந்தபோது, ரயிலில் தொங்கிக்கொண்டிருந்த பயணிகள் அந்த தடுப்புச்சுவரில் மோதின.
படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பயணிகள் அடிபட்டு தண்டவாளத்தில் விழுந்துள்ளனர். இதில் தலை, உடல் நசுங்கியும் மற்றும் கால் துண்டிக்கப்பட்டும் ரத்த வெள்ளத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
நேற்று இரவும் இதேபோன்று ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே நிர்வாகத்தின் அலட்சிமே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் தொங்கி கொண்டு பயணித்தபோது ரயிலை குறைந்த வேகத்தில் இயக்கவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.
அல்லது தடுப்பு சுவர் இருப்பதை ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கைவி்ல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ரயில்வே ஏடிஜிபி சைலேந்திர பாபு கூறுகையில் பரங்கிமலை விபத்துக்கு காரணமான தடுப்பு சுவரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். படிக்கட்டு பயணம் குறித்து, பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பின் இதனை தெரிவித்துள்ளார்.