Chellur K.Raju says the farm green vegetables shop will be expand
தூத்துக்குடி
தூத்துக்குடியில், பண்ணைப் பசுமைக் காய்கறிக் கடையில் ஆய்வு செய்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, “பண்ணைப் பசுமைக் காய்கறிக் கடைகள் விரிவாக்கம் செய்ய பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்..
தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் மூலம் பண்ணைப் பசுமைக் காய்கறிக் கடை நடத்தப்படுகிறது.
இந்தக் கடையை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, கடைக்கு வந்த மக்களிடம் காய்கறிகள் குறைவான விலையில் கிடைக்கிறதா? தரமான காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
“தமிழ்நாட்டில் பண்ணைப் பசுமைக் காய்கறிக் கடைகள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 72 கடைகளும், நகரும் இரண்டு கடைகளும் இயங்கி வருகின்றன. 26 ஆயிரத்து 500 டன் காய்கறிகள் ரூ.75 கோடியே 32 இலட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக இடைத் தரகர்கள் இல்லாமல் காய்கறிகள் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் காய்கறிகள் குளிரூட்டப்பட்ட வேன்கள் மூலம் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குக் கொண்டுச் செல்லப்பட்டு குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தூத்துக்குடியில் உள்ள கடையில் தினமும் ரூ.1½ இலட்சம் வரை காய்கறி விற்பனை நடக்கிறது. தமிழ்நாட்டிலேயே அதிக விற்பனை செய்யும் கடையாக உள்ளது. மக்கள் இங்கு அதிக ஆர்வமாக வந்து வாங்கிச் செல்கின்றனர்.
இந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. கூட்டுறவு மற்றும் தோட்டக்கலைத்துறை இணைந்து வட்டார அளவிலும் பண்ணைப் பசுமைக் காய்கறிக் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ராஜகோபால், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார், துணைப்பதிவாளர் சிவகாமி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
