மத்திய அரசின் நீர்வளத் துறை வல்லுநர்கள் கிருஷ்ணகிரி அணையில் ஆய்வு; சேதமடைந்த மதகை பார்வையிட்டனர்...
கிருஷ்ணகிரி
மத்திய அரசு நீர்வளத் துறையைச் சேர்ந்த அணை பாதுகாப்பு சிறப்பு வல்லுநர்கள் குழு கிருஷ்ணகிரி அணையை ஆய்வு நடத்தினர். இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.
கிருஷ்ணகிரி அணையின் பிரதான மதகில் முதல் கதவு கடந்த மாதம் 29-ஆம் தேதி சேதமடைந்ததால் மதகின் வழியாக அணையிலிருந்து தண்ணீர் வெளியேறியது.
இதனையடுத்து, தமிழ்நாடு பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் முருகு சுப்பிரமணியன் தலைமையில், குழுவினர் சேதமடைந்த பகுதியை வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். பின்னர் அணையிலிருந்து மற்ற ஏழு மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்ற உத்தரவிட்டனர். அதன்படி, அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றின் வழியாக வினாடிக்கு 8000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
சேதமடைந்த மதகை சரிபடுத்தும் வகையில் தளவாடப் பொருள்கள் லாரியின் மூலம் கிருஷ்ணகிரி அணைக்கு கொண்டுவரப்பட்டன. தற்போது அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மத்திய அரசின் நீர்வளத் துறையின் அணை பாதுகாப்பு சிறப்பு வல்லுநர் குழுவினைச் சேர்ந்த எட்வார்டு பிளிண்ட், சச்துதேவா ஆகியோர் சேதமடைந்த மதகு பகுதியை நேற்று ஆய்வு நடத்தினர். இதுகுறித்து அவர்கள் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்தக் குழுவினர் மீண்டும் அணைக்கு வந்து, அணையின் நீர்மட்டம் 20 அடியாக குறைந்த நிலையில் மற்ற மதகுகளை அவர்கள் ஆய்வு செய்து, உகுந்த ஆலோசனைகளை வழங்குவர் என்று பொதுப் பணித் துறையினர் கூறினர்.