கொடநாடு எஸ்டேட்டில் கண்காணிப்பு கேமராக்கள்!!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் 7 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஓய்வெடுக்கும் பங்களாவான கொடநாடு எஸ்டேட் பங்களா உள்ளது.
அங்கு நேபாள நாட்டை சேர்ந்த ஓம் பகதூர் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் காரில் வந்த மர்ம நபர்கள் ஓம் பகதூரை கொலை செய்துவிட்டு தப்பிவிட்டு சென்றனர்.
இந்த சம்பவத்தில் மேலும் ஒரு காவலாளி தாக்கப்பட்டார். சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் சொத்துபட்டியலில் கொடநாடு பங்களா பெயரும் அடிபட்டது. இதையடுத்து இந்த பங்களாவின் காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதைதொடர்ந்து கொடநாடு காவலாளி கொலை வழக்கில் விசாரணை கமிஷன் அமைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. மேலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
அதன்படி தற்போது கொடநாடு பங்களாவில் 7 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது.