ரூ.15 கோடியை ஆட்டையை போட்ட சுகேஷ் சந்திரா - பரபரப்பு பின்னணி தகவல்கள்
தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் டிடிவி தினகரனுக்கு இடை தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திராவும் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். பெண்களுக்கான நாப்கின் மற்றும் ஆணுறை உள்ளிட்ட பொருட்களை வழங்கும் தானியங்கி மெஷின்களை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இங்கு தயாரிக்கும் மெஷின்களை பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த 2013ம் ஆண்டு சுகேஷ் சந்திரா, தொலைபேசி மூலம் பாலசுப்பிரமணியனை தொடர்பு கொண்டார். அப்போது, தான் கர்நாடக மாநில ஐஏஎஸ் அதிகாரி என அறிமுகம் செய்து கொண்ட அவர், பெங்களூரில் அரசு இணைச் செயலாளராகவும், திட்ட இயக்குநராகவும் வேலை பார்ப்பதாக கூறியுள்ளார்.
மேலும், 15 ஆயிரம் நாப்கின் மெஷின்களும் 15 ஆயிரம் ஆணுறை வழங்கும் தானியங்கி மெஷின்களும் பெங்களூர் மாநகரத்துக்கு வேண்டும். அதற்கான அரசு டெண்டரை எடுத்து தருகிறேன். இந்த டெண்டருக்கான முன்பணமும் கேட்டுள்ளார்.
அவரது ஆசை வார்த்தைகளை நம்பிய பாலசுப்பிரமணியன், பல்வேறு கால கட்டங்களில் அம்பத்தூர் கனரா வங்கியில் இருந்து தனது ஓ.டி. கணக்கு மூலமாக சட்ட விரோதமாக ரூ.15.07 கோடியை சுகேஷ் சந்திரா கூறிய மும்பை வங்கி கணக்குக்கு அனுப்பினார். இதற்கு கனரா வங்கியின் முதுநிலை மேலாளர் ஜெகதீசாவும் உடந்தையாக இருந்துள்ளார்.
இந்த மோசடி மூலம் கனரா வங்கிக்கு ரூ.15.07 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக கூறி பாலசுப்பிரமணியன், வங்கி முதுநிலை மேலாளர் ஜெகதீசா, சுகேஷ் சந்திரசேகர் ரெட்டி, அஜீத்குமார் சோஷன்லால் ஜெயின், பியூச்சர் டெக்னிக் நிறுவனம் உள்ளிட்டவர்கள் மீது மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளில் சிபிஐ கடந்த 2014 மே 30ல் வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் வந்தது. அப்போது, சிபிஐ சிறப்பு வக்கீல் தினகரன், இந்த வழக்கில் 3வது நபராக குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் சந்திராக தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றார்.
இதையடுத்து அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்த நீதிபதி கே.வெங்கடசாமி, வரும் ஜூன் 9ம் தேதிக்குள் சுகேஷ் சந்திராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தற்போது, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வாங்கித் தர ரூ.50 கோடியை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி.தினகரன் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.