புதுக்கோட்டையில் பிடிபட்டது 12 அடி நீள மலைப்பாம்பு; நாயை விழுங்கும்போது சிக்கியது...
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் 12 அடி நீள மலைப்பாம்பு, நாயை விழுங்குவதை பார்த்த மற்ற நாய்கள் அலறிய சத்தத்தால் அந்த பகுதியே பரபரப்பு அடைந்தது.
புதுஜக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகேயுள்ள பெருமநாடு அரசு உயர்நிலைப்பள்ளி அருகே ஐந்துக்கும் மேற்பட்ட நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து சத்தம் கேட்கவே சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் நாய் குரைக்கு சத்தத்தை பின்தொடர்ந்தனர்.
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நிஜாமுதீன் மற்றும் சிலர் பெருமநாடு அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சத்தம் வருவதை அறிந்து அந்தப் பகுதிக்கு விரைந்து சென்றனர். பள்ளி அருகே உள்ள காட்டுப்பகுதியில் சென்று பார்த்தனர்.
அப்போது, 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று நாயை விழுங்கிக் கொண்டிருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு நாயை மலைப்பாம்பு விழுங்கிக் கொண்டிருப்பதை பார்த்த மற்ற நாய்கள் அதிக சத்தமிட்டு குரைத்துக் கொண்டிருந்ததையும் அவர்கள் பார்த்தனர்.
பின்னர், அவர்கள், இன்னும் சிலரின் உதவியோடு அந்த மலைபாம்பைப் பிடித்து பெருமநாடு அருகே உள்ள வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டனர்.