காரைக்காலில் புதுச்சேரி யூனியன் பிரதேச பூர்வீக ஆதிதிராவிடர் சான்றிதழ் பெறுவதற்காக, போலி சான்றிதழ் சமர்ப்பித்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
காரைக்கால் திருநள்ளாறை அடுத்துள்ள சுரக்குடியை சேர்ந்த தங்கராசு மகன் இளவரசன். இவர், காரைக்கால் நகராட்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர், புதுச்சேரி யூனியன் பிரதேச பூர்வீக ஆதிதிராவிடர் என்ற சாதிச்சான்றிதழ் கேட்டு திருநள்ளாறு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
கடந்த 1964–ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த சான்றிதழ் வழங்கப்படும் என்பதால் இளவரசனிடம் பிறப்பு சான்றிதழ் திருநள்ளாறு தாலுகா அலுவலகத்தில் கேட்கப்பட்டுள்ளது. அவரும் அதற்கான சான்றிதழ் நகலை தனது விண்ணப்பத்துடன் இணைத்திருந்தார்.
இந்த நிலையில் அவர் உண்மையிலேயே காரைக்கால் மாவட்டத்தில் பிறந்தவர்தானா? என்று துணை தாசில்தார் இரவிச்சந்திரன் விசாரணை நடத்தினார். இதில், அவர் தமிழகத்தில் இருந்து வந்து காரைக்கால் மாவட்டத்தில் குடியேறியவர் என்பது தெரியவந்தது.
அவரிடம் உள்ள அசல் பிறப்பு சான்றிதழ் கிழிந்து காணப்பட்டதால் கோர்ட்டில் உள்ள மற்றொரு பிறப்பு சான்றிதழை சரிபார்த்தபோது இளவரசன் போலியான பிறப்பு சான்றிதழை கொடுத்திருப்பது தெரிய வந்தது.
எனவே, துணை தாசில்தார் இரவிச்சந்திரன், இளவரசன் மீது திருநள்ளாறு காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் காவல்துறையினர், இளவரசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
