Cartoonist Bala relased with jamin who criticized the Tamil Nadu government

திருநெல்வேலி

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழக அரசை விமர்சித்து கேலிச் சித்திரம் வரைந்ததால் கைது செய்யப்பட்ட கார்ட்டூனிஸ்ட் பாலாவை ஜாமீனில் விடுதலை செய்து திருநெல்வேலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தனது இரண்டு குழந்தைகளுடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து கார்ட்டூனிஸ்ட் பாலா தமிழக முதலமைச்சர், திருநெல்வேலி ஆட்சியர், திருநெல்வேலி காவல்துறை ஆணையர் ஆகியோரை கேலி செய்து சித்திரம் ஒன்றை வரைந்திருந்தார்.

அந்தச் சித்திரம் சமூக வலைத்தளங்களில் பரவி மக்களின் ஆதரவைப் பெற்றது. இது குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி காவல்துறையில் அளித்த புகாரின்பேரில் கார்ட்டூனிஸ்ட் பாலா மீது திருநெல்வேலி காவலாளர்கள் வழக்குப் பதிந்தனர்.

இந்தப் புகாரின்பேரில் சென்னையில் உள்ள கோவூரில் உள்ள வீட்டில் வைத்து பாலாவை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் திருநெல்வேலிக்கு அழைத்து வரப்பட்டார்.
அவரை திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் காவலாளர்கள் நேற்று சமர்ப்பித்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமதாஸ், கார்ட்டூனிஸ்ட் பாலாவுக்கு ஜாமீன் வழங்கியதோடு, வழக்கு விசாரணையை இம்மாதம் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.