Buy land only But do not give a job - petition to collector on NLC
கடலூர்
எங்களிடம் நிலங்களைப் பெற்றுக்கொண்டு, எங்களுக்கு எந்த ஒரு வேலை வாய்ப்பையும் என்.எல்.சி தரவில்லை. எனவே, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்காவிட்டால் என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலங்களை தர மாட்டோம் என்று கெங்கைகொண்டான் மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், கெங்கைகொண்டான் பேரூராட்சியைச் சேர்ந்த அகிலாண்டகெங்காபுரம், பழைய தாண்டவன்குப்பம், காமராசர்நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், “நாங்கள் கடந்த 1957 மற்றும் 1961–ஆண்டுகளில் இரண்டு முறை நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு எங்கள் நிலங்களை மிக குறைந்த விலைக்குக் கொடுத்துள்ளோம்.
ஆனால், எங்களுக்கு நிர்வாகம் எந்தவொரு வேலை வாய்ப்போ, மாற்று இடமோ வழங்கவில்லை. தற்போது மீதியுள்ள ஒரு ஏக்கர், அரை ஏக்கர் நிலங்களை வைத்து கெங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம்.
அந்த நிலத்திலும் 1998–ஆம் ஆண்டு சாம்பல் ஏரி உடைப்பெடுத்து, நிலங்கள் முழுவதும் வீணாகி விட்டது. அதை சரி செய்து தற்போது விவசாயம் செய்து வருகிறோம். இந்த மூன்று பகுதியில் உள்ள 500 குடும்பத்தினருக்கு என்.எல்.சி. நிர்வாகம் இதுவரை எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை.
இந்த நிலையில் முதல் சுரங்க விரிவாக்கப் பணிக்காக எங்கள் பகுதி நிலங்கள் தேவைப்படுவதாக அறிவிப்பு வெளியாகி வருகிறது. எங்கள் நிலங்களைக் கொடுக்க சம்மதமில்லை என்று ஏற்கனவே நாங்கள் மனு அளித்துள்ளோம்.
ஆனால், நிர்வாகம் ஒரு சிலருக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணைக்கு அழைத்து அவர்களிடம் கையொப்பம் பெற்று வருகிறது. எங்களுக்கு வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்காவிட்டால் என்.எல்.சி. நிறுவனத்திற்கு எங்களின் நிலங்களை கொடுக்க மாட்டோம். எனவே, எங்களின் பகுதியை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் அப்பகுதி மக்கள் தெரிவித்து இருந்தனர்.
