burnt ambedkar image visika member tried to burn
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடி மற்றும் அதில் இருந்த அம்பேத்கர் படத்தை தீ வைத்து கொளுத்தியதால் ஆவேசமடைந்த விசிக தொண்டர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கோவிந்தாபுரம், மகனூர்பட்டி, கொண்டம்பட்டி ஆகியப் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிகள், கட்சியின் பெயர் பலகையில் உள்ள அம்பேத்கர் படத்தின் மீது எண்ணெய் ஊற்றி சிலர் தீ வைத்து எரித்துவிட்டனர்.
இதனைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நேற்று காலை கொண்டம்பட்டி அருகே உள்ள பெங்களூரு - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அன்பரசன் (30) என்பவர் திடீரென தலையில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் அங்கு பரபரப்பு தொற்றிக் கொண்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை துணை காவல் கண்காணிப்பாளர் அர்ஜூனன் மற்றும் காவலாளார்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, "சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று காவலாளர்கள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.
