Bulls winning the million rupee Erutuvitum Festival in culakiri

சூளகிரி

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சூளகிரியில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் யாராலும் தொட முடியாத அளவிற்கு சீறிப்பாய்ந்து வெற்றிப் பெற்ற காளைகளை வியாபாரிகள் இலட்சம் ரூபாய் வரை கொடுத்து வாங்கிச் சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகேயுள்ள மூக்காண்டப்பள்ளியில் மிகப்பெரிய எருது விடும் விழா நடைப்பெற்றது. இந்த விழாவிற்காக சூளகிரி, கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, இராயக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட காளைகள் அலங்கரித்துக் கொண்டு வந்திருந்தனர் அதன் உரிமையாளர்கள்.

இந்நிகழ்ச்சியை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார்.

விழாவில் காளைகளின் கொம்புகளில் வெள்ளிகாசுடன் கூடிய வண்ண பதாகைகள் கட்டி விடப்பட்டன. சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளின் தலையில் இருந்து பதாகைகளை எடுப்பதற்காக இளைஞர்கள் உற்சாகமாக ஓடினார்கள்.

சில காளைகள் பொதுமக்கள் கூட்டத்திற்குள் புகுந்ததால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

இதில் சில இளைஞர்கள் வண்ண பதாகைகளை பறித்தனர். சில காளைகள் இளைஞர்களின் கையில் சிக்காமல் துள்ளி குதித்து சென்றன. அவ்வாறு சென்ற காளைகளை வியாபாரிகள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றார்கள். இதில் பல காளைகள் பல இலட்சம் ரூபாய்க்கு விலை போனது.

எருது விடும் விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வருவாய்த்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர். விழாவில் ஓடிய காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து அனுப்பினார்கள்.

நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய எருது விடும் விழா மதியம் 3 மணி வரையில் நடைபெற்றது. விழாவைக் காண திரண்ட மக்களுக்கு விழா நடைபெற்ற இடத்தின் அருகிலேயே அன்னதானம், நீர்மோர் ஆகியவை வழங்கப்பட்டன.

இவ்விழாவை முன்னிட்டு சூளகிரியில் இருந்து விழா நடைபெற்ற இடத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் அஞ்செட்டி காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் 150–க்கும் மேற்பட்ட காவலாளர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.