சுடுகாடு பகுதியில் வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு - மீட்டு தரக்கோரி கிராம மக்கள் மனு...
திருப்பூர்
திருப்பூரில் சுடுகாட்டு பகுதியில் வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்றும் அதனை மீட்டு சீரமைத்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
இதில், வீரபாண்டி ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “எங்கள் பகுதியில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம்.
இந்தப் பகுதியில் தனியார் ஒருவர் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கொண்ட வீட்டை வாடகைக்கு விட்டு, அதில் இருந்து வருகிற சாக்கடை உள்ளிட்ட கழிவுநீரை தெருவில் நேரடியாக திறந்து விடுகிறார். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
எனவே, இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அதில் கூறியிருந்தனர்.
அதேபோன்று அவினாசி தாலுகா ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் வெள்ளிரவெளி கஸ்பா கிராம மக்கள் கொடுத்த மனுவில், “எங்கள் பகுதியில் சுடுகாடு பகுதியில் வீடுகள், குப்பை கிடங்குகள் அமைத்து சுடுகாடு பகுதியினை ஆக்கிரமித்துள்ளனர்.
இது தொடர்பாக பலரிடம் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கல்லாகுளம் சுடுகாடு பகுதியை சீரமைத்து தர வேண்டும்" என்று கூறியிருந்தனர்.