வெடிகொண்டு வீசியும், தொழிலதிபரை அரிவாளால் வெட்டியும் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் அட்டூழியம்...
தூத்துக்குடி
தூத்துக்குடியில் காரில் சென்ற தொழில் அதிபரை மீது வெடிகுண்டு வீசியும், அவரையும், அவரது உறவினரையும் அரிவாளால் வெட்டியும் தி.மு.க ஒன்றிய செயலாளர் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வடக்கு தெருவைச் சேர்ந்த செல்லத்துரை மகன் சிவராமன் (39). தொழில் அதிபரான இவருக்கு திருவைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலம் என்ற ஊரில் 350 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் தனக்கும் பங்கிருப்பதாக, அதே ஊரைச் சேர்ந்த தி.மு.க. ஒன்றியச் செயலாளரான வைகுண்டம் கூறி வருகிறார். இது தொடர்பாக சிவராமனையும் பலமுறை மிரட்டியுள்ளார் வைகுண்டம். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் நேற்று சிவராமனுக்கு சொந்தமான இடத்தில் வைகுண்டம் ஆதரவாளர்கள் வாகனத்தில் செம்மண் அள்ளிக்கொண்டு இருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிவராமன் வீட்டில் இருந்து காரில் திருவைகுண்டம் காவல் நிலையத்துக்கு புகார் கொடுப்பதற்காக புறப்பட்டார். அவருடன், உறவினரான அதே ஊரை சேர்ந்த ராமசாமி மகன் நல்லமாடன் (32) சென்றார்.
வைகுண்டம் தரப்பினர் அத்துமீறி தனது இடத்தில் செம்மண் அள்ளுவதாக காவல் நிலையத்தில் சிவராமன் புகார் செய்தபின்னர் அவர் உறவினர் நல்லமாடனுடன் அங்கிருந்து காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
மாலை 4 மணியளவில் திருவைகுண்டம் மேடை பிள்ளையார் கோவில் அருகே சென்றபோது, ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென சிவராமனின் காரை வழிமறித்தனர்.
அப்போது அவருடைய கார் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை தொடர்ந்து வீசினர். இதில் இரண்டு குண்டுகள் காரில் பட்டு வெடித்தன. ஒரு குண்டு வெடிக்காமல் சாலையில் விழுந்தது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டமாக இருந்தது. இதனால் நிலைகுலைந்த சிவராமனும், நல்லமாடனும் காரில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்றனர்.
ஆனால், மர்மகும்பல் சிவராமனை துரத்தி சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவருடைய தலை, கழுத்து, கை, உடலில் அரிவாள் வெட்டு விழுந்தது.
இரத்தம் சொட்டச் சொட்ட ஓடிய அவரை காப்பாற்றுவதற்காக உறவினர் நல்லமாடன் முயன்றார். அவரையும் மர்மகும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு கார், மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் உருவானது. அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவைகுண்டம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன், உதவி ஆய்வாளர் முருகபெருமாள் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று இரத்த வெள்ளத்தில் கிடந்த சிவராமன் உள்பட இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின், மேல் சிகிச்சைக்காக இருவரும் பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
காவலாளர்களின் முதற்கட்ட விசாரணையில், "முன்விரோதத்தில் தி.மு.க. பிரமுகர் வைகுண்டம் ஆதரவாளர்கள் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்" என்பது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? யார்? என்பது குறித்து காவலாளர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.