வாக்காளர் பட்டியல் ஆய்வுக்காக சென்னை வந்த பாஜக தேசியப் பொதுச்செயலாளர் தருண் சுக், உதயநிதியை 'அறிவு வளராத பையன்' என்று குறிப்பிட்ட தருண் சுக், சனாதனம் குறித்த அவரது பேச்சுக்காக ராகுல் காந்தியின் இத்தாலி கண்ணாடியை அணிந்து பார்ப்பதாகக் கூறினார்.

பாஜகவின் தேசியப் பொதுச்செயலாளர் தருண் சுக், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) தொடர்பான ஆய்வுப் பணிகளுக்காக தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். இன்று சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் அவர் ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தக் கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர்கள் தமிழிசை சவுந்தர்ராஜன், அண்ணாமலை உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த பணிகள் பற்றி தருண் சுக் நிர்வாகிகளிடம் பேசினார்.

உதயநிதியை விமர்சித்த அண்ணாமலை

ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு, தேசியப் பொதுச்செயலாளர் தருண் சுக், மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தனர்.

அண்ணாமலை பேசுகையில், "தேர்தல் நெருங்கிவிட்டால் உதயநிதி ஸ்டாலின் ஆரியர் – திராவிடர் என்று பேசத் தொடங்கிவிடுகிறார்" என்று குற்றம் சாட்டினார். கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதையும் அவர் நினைவூட்டினார்.

அறிவு வளராத பையன்

அப்போது குறுக்கிட்டுப் பேசிய தருண் சுக், உதயநிதி ஸ்டாலினை "மந்த புத்தி பாலகே" என்று இந்தியில் குறிப்பிட்டார். உடனடியாக இதை மொழிபெயர்த்த அண்ணாமலை, "அறிவு வளராத பையன் என்று சொல்கிறார்" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய தருண் சுக் பேசியதை அண்ணாமலை தமிழில் மொழிபெயர்த்தார். "உலகத்தில் நீண்ட காலமாக நிலவிவரும் ஆரோக்கியமான மதம் இந்துமதம். இது யாருக்கும் எதிரான மதம் இல்லை. அந்த மதத்தைப் பற்றி அவர் (உதயநிதி) டெங்கு கொசு என்று சொல்கிறார் என்றால், அவர் ராகுல் காந்தி கொடுத்த இத்தாலி கண்ணாடியை அணிந்துகொண்டு பார்க்கிறார். அவர் அதைக் கழற்றிவிட்டு இந்தியக் கண்ணாடி அணிந்துகொண்டால் எல்லாம் சரியாகத் தெரியும்" என்று தருண் சுக் விமர்சித்தார்.

Scroll to load tweet…

உதயநிதி ஸ்டாலினின் விமர்சனம்

முன்னதாக, வியாழக்கிழமை நடந்த நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய பேச்சு குறித்து விமர்சித்திருந்தார்.

"தமிழ் படிக்க ஆர்வமாக இருக்கும் நீங்கள் (மோடி) தமிழ் படிக்கும் குழந்தைகளிடம் இந்தியை, சமஸ்கிருதத்தை திணிப்பது எந்த வகையில் நியாயம்? மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் நிதி தருவோம் எனக் கூறுவது எந்த வகையில் நியாயம்?" என்று பிரதமர் மோடியைக் கேள்வி எழுப்பினார் உதயநிதி ஸ்டாலின்.