Birds surveying The mosquito bird found in the millennium ...

நாகப்பட்டினம்

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் நடந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணியின்பொது கொசு உள்ளான் இனப் பறவைகள் இலட்சக்கணக்கில் காணப்பட்டது என்று கணக்கெடுக்கும் குழு தெரிவித்தது.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ளது கோடியக்கரை பறவைகள் சரணாலயம்.

பறவைகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் இந்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் கார்காலப் பருவத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து பூநாரைகள், கூழக்கிடா, செங்கால் நாரை, கடல் காகம் உள்ளிட்ட 250-க்கும் அதிகமான இனப் பறவைகள் இலட்சக்கணக்கில் வலசை வந்து திரும்புவது வழக்கம்.

இந்தப் பறவைகள் குறித்து ஆண்டுதோறும் வனத்துறையினர் மூலம் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படும். இந்தாண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று நடைப்பெற்றது.

திருச்சி மண்டல வனப் பாதுகாவலர் கே.கே.கௌசல், மாவட்ட வனப் பாதுகாவலர் குருசாமி ஆகியோரது வழிகாட்டுதலின்படி இந்த பணி நடைப்பெற்றது.

கோடியக்கரை வனச் சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் நடைபெற்ற கணெக்கெடுப்பு பணியில், பூம்புகார் கலை அறிவியல் கல்லூரி, சீனிவாசா மேல்நிலைப் பள்ளி, குரவப்புலம் பாயிண்ட் காலிமர் சர்வதேசப் பள்ளி மற்றும் மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி மாணவ, மாணவியர், மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தினர் உள்பட 90 பேர் ஈடுபட்டனர்.

இவர்கள் 12 குழுக்களாகப் பிரிந்து காலை 6 முதல் பகல் 11 மணி வரை இந்தப் பணியில் ஈடுபட்டனர். இதில், செல்லக்கண்ணி வாய்க்கால் பகுதி சதுப்பு நிலப் பரப்பில் காணப்பட்ட பறவைகளை கணக்கெடுக்க ஐவர் கொண்ட குழுவினர் படகில் சென்றனர்.

இந்த கணக்கெடுப்பின்போது, கொசு உள்ளான் இனப் பறவைகள் இலட்சக்கணக்கில் காணப்பட்டதாகத் தெரிவித்தனர்.

இந்த பணியில் மும்பை இயற்கை வரலாற்றுக் கழகப் பறவையியல் விஞ்ஞானி பாலசந்திரன், வனக் காவலர்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் கணக்கெடுப்புக் குழுவினருக்கு வழிகாட்டியாக செயல்பட்டனர்.