“சென்னையில் திருடி மைசூரில் விற்பனை…!!!” - பைக் திருடும் பலே வாலிபர்கள் கைது…!!!
தமிழகம் முழுவதும் ரயில் நிலையம், பஸ் நிலையம், வணிக வளாகங்கள், கோயில் உள்பட பல பகுதிகளில் சாலையில் நிறுத்தப்படும் பைக்குகள் அடிக்கடி திருடு போகின்றன. பூட்டி வைக்கும் பைக்குகள் மாயமாவதால், இது தொடர்பான புகார்கள், போலீசாரையே திணற வைத்தது.
பெரும்பாலும் இதுபோன்று திருடப்படும் பைக்குகள், நிலத்தடி நீர் உறிஞ்சுவதற்கும், கடலில் மீன் பிடிக்க செல்லும் விசைப்படகுகளுக்கும் பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், தமிழகத்தில் திருடப்படும் வாகனங்கள், பல்வேறு மாநிலங்களுக்கு கடத்தி சென்று, அதில் உள்ள பதிவு எண்ணை மாற்றி, விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அனைத்து மாநில போலீசாருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, சந்தேகப்படும்படி சுற்றி திரிந்தால், அவர்களை கைது செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், மைசூரு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் திருடப்படும் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அங்குள்ள போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இதைதொடர்ந்து நேற்று காலை மைசூர் நெடுஞ்சாலையில் 2வாலிபர்கள் பைக்கில் வேகமாக சென்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள், முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால், போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து போலீசார், 2 பேரையும் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், மைசூரு மாவட்டம் சாரதாதேவி நகரை சேர்ந்த வசந்த் (37), கும்பாரகொப்பாலு கிராமத்தை சேர்ந்த மாதேஷா (35) என தெரியவந்தது. மேலும் விசாரணையில், தமிழகத்தில் சாலையில் நிறுத்தப்படும் பைக்குகளை திருடி சென்று, மைசூருவில் விற்பனை செய்ததை ஒப்பு கொண்டனர்.
அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி போலீசார், ரூ.2 லட்சம் மதிப்பிலான பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதேபோல் வேறு எங்காவது அவர்கள் பைக்குகளை திருடியுள்ளார்களா, அவர்களின் பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்களா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.