தண்ணீர் தேங்கியதற்கு ரூ. 10 லட்சம் அபராதம் - விழி பிதுங்கிய தனியார் மருத்துவமனை...
டெங்குவை பரப்பும் வகையில் தண்ணீர் தேங்கி இருந்ததால் சேலம் தனியார் மருத்துவமனைக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் டெங்குவால் பலர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழந்து வருகின்றனர்.
மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டமான சேலம் மாவட்டத்தில் மட்டும் அதிக பேர் உயிரிழந்து வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு கூறிவந்தாலும், உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
நாட்டிலேயே டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது தமிழகம்தான். அதில் சேலத்தில் சோல்லவே தேவை இல்லை. அந்த அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டு கொண்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
இதையடுத்து டெங்குவை பரப்பும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ளாத வீடுகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அபராதம் விதிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதைதொடர்ந்து பல இடங்களில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது டெங்கு பரவும் வகையில் தண்ணீர் மற்றும் குப்பைகள் தேங்கி இருந்ததால் ரூ. 3 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
ஆனால் பணத்தை செலுத்த முடியாது என கூறி மருத்துவமனை நிர்வாகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. இதனால் அபராதத்தை ரூ. 10 லட்சமாக உயர்த்தி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.