ஸ்டான்லி மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு - சிசிடிவி கேமராவால் பொதுமக்களே கண்டுபிடித்தனர்
கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர்கள் ரகமத்துல்லா – உசேனா தம்பதியினர். இவர்களுக்கு ஜாபர், ஆசிப்(3) என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், உஷேனாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஆசிப்புடன் ஸ்டான்லி மருத்துவமைக்கு வந்துள்ளார். அங்கு ஆசிப்பை தூக்கி கொண்டு வரிசையில் நின்ற உசேனா கூட்டம் அதிகமாக இருந்ததால் கைவலி காரணமாக குழந்தையை கீழே இறக்கி விளையாட விட்டுள்ளார்.
சிறிது நேரத்தில் குழந்தை மாயமானத்தை கண்டு உசேனா அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உசேனா போலீசாருக்கு புகார் அளித்ததின்பேரில் அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என்பது தெரிய வந்தது. பின்னர், ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் மூன்று வயது குழந்தை ஆசிப்பை ஒரு பெண் அழைத்து செல்வது போல் காட்சி பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சியை ஊடங்கங்கள் வெளியிட்டன.
மேலும் கடத்தப்பட்ட குழந்தையை மீட்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், சிசிடிவி காட்சியை பார்த்த பொதுமக்கள் கடத்தி சென்ற பெண் டீக்கடையில் குழந்தையுடன் டீ குடித்து கொண்டிருந்தபோது கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் இருந்து கடத்தப்பட்ட ஆசிப்பை பொதுமக்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
குழந்தையை கடத்திய எண்ணூரை சேர்ந்த சுபாஹனி என்ற பெண்ணை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.