As ops joins in admk like dinakaran also will join - MLA Rajan chellappa

மதுரை

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தற்போது கட்சியில் இணைந்து செயல்படுவதுபோல டி.டி.வி.தினகரன் கட்சியில் ஒன்றிணைந்து செயல்படலாம் என்று எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், வடக்கு தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், மதுரை மாநகராட்சி முன்னாள் மேயருமான ராஜன் செல்லப்பா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்று அளித்தார்.

அதில், “சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கான அவசியம் இல்லை என்று ஆரம்பத்தில் சொன்னேன். அதற்கு முதலமைச்சர் சரியான விளக்கம் அளித்தார். அவரது விளக்கத்தை நான் ஏற்றுக் கொண்டேன். பொதுச்செயலாளர் பதவியே இல்லை என்கிறபோது, சசிகலா பதவி தானாக போய்விடுகிறது.

தற்போது 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார். அவர்களுக்கு சபாநாயகர் நோட்டீசு அனுப்பியும், அவர்கள் அதனை உதாசீனப்படுத்தி உள்ளனர். சபாநாயகரின் இந்த முடிவு அரசு ரீதியாக சரியானது.

ஆனால், கட்சி ரீதியாக பார்க்கும்போது எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டியதில்லை. அதற்கு பதிலாக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்திருக்கலாம். இதன்மூலம் அவர்கள் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களாக கருதப்பட்டு அவர்களுக்கு வாக்குரிமை இல்லாமல் போய் இருக்கும். இது எனது தனிப்பட்ட கருத்து.

முதலமைச்சர் எடப்பாடி தரப்பும், டி.டி.வி.தினகரன் தரப்பும் ஒருவரை ஒருவர் வசைபாடுகின்றனர். இதற்கு முன்பு இப்படி இருந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது கட்சியில் இணைந்து செயல்படுகிறார். அதே போல் டி.டி.வி.தினகரனும் கட்சியில் ஒன்றிணைந்து செயல்படலாம்.

ஆனால், அதற்கான வாய்ப்பு, இப்போதைக்கு இல்லை. எதிர்காலத்தில் அப்படி ஒரு நிலை வந்தால், நானே முன்னின்று இணைப்பு பணியை மேற்கொள்வேன். என்னை பொறுத்தவரை அ.தி.மு.க. ஒன்றிணைந்து இருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.