Army Helicopter crash live updates : குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து - விமானப்படை தளபதி வருகை
ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தை பார்வையிடுவதற்காக இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி சூலூர் விமானப் படைத்தளத்திற்கு வந்துள்ளார்.
குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர். மேலும் கீழே விழுந்ததில் ஹெலிகாப்டர் நொறுங்கி தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த 2 ராணுவ அதிகாரிகள் வெலிங்கடன் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை விபத்து நடந்த இடத்திலிருந்து 5 பேரின் உடல்கள் மீட்கப்படுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே உடனடியாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. ராணுவம் தரப்பிலிருந்து விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயரிய தொழில்நுட்ப வசதிகளைக்கொண்டதாக கூறப்படும் ரஷ்யாவின் கசன் நிறுவன தயாரிப்பான எம்.ஐ - 17வி5 என்ற ராணுவ ஹெலிகாப்டர் தான் தற்போது விபத்துக்குள்ளாகியுள்ளது. தலைமை ஜெனரல் பிபின் ராவத் பயணம் செய்ததால் மிகுந்த சோதனை மற்றும் பாதுகாப்புப் பிறகே ஹெலிகாப்டர் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சரியாக 11.47 மணிக்கு கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டிருக்கிறது. இந்த விபத்தானது மதியம் 12.20 மணிக்கு, அதாவது வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு 10 கி.மீ தொலைவில் நிகழ்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரத்திற்கு விடாமல் தீப்பற்றி எரிந்தாகவும், மிகுந்த போராட்டத்திற்குப்பிறகே தீ அணைக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு விரைந்துள்ளார். மேலும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மருத்துவக்குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. விபத்து நடந்த இடம் முழுவதும் தற்போது இராணுவத்தினர் கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஆய்வு மற்றும் விசாரணை முன்னெடுக்கபட்டுள்ளது. நொறுக்கிய ஹெலிகாப்டர் பாகங்கள், கருப்புபெட்டி உள்ளிட்டவை தேடும் பணியில் இராணுவத்தினர் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் தமிழக காவல்துறையினரும் , இராணுவத்தினருடன் இணைந்து விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு , தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீட்பு பணிகளை பார்வையிட, இன்று மாலை செல்கிறார். மேலும் மீட்பு பணியை துரிதப்படுத்தவும், காயமடைந்தோருக்கு உயரிய சிகிச்சை வழங்கவும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மற்றொருபக்கம் தமிழ்நாடு அரசு சார்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுத்துறைச்செயலாளர் ஜகந்நாதன், தலைமைச்செயலாளர் இறையன்பு ஆகியோர் தலைமைச்செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தை பார்வையிடுவதற்காக இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி சூலூர் விமானப் படைத்தளத்திற்கு வந்துள்ளார். தலைமை தளபதி பிபின் ராவத் படுகாயமடைந்து மருத்துவமனையில சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இந்திய விமானபடை தளபதி வி.ஆர் சவுத்ரி தற்போது சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.