Army Helicopter crash live updates : இதுவரை 9 பேர் உடல்கள் மீட்பு .. பிபின் ராவத் நிலை குறித்தான அப்டேட்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காயமடைந்த 3 பேரில் ஒருவர் இராணுவ மருத்துவமனையில் கொண்டும் செல்லும் வழியில் உயிரிழந்ததாக அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இன்று பிற்பகலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்றது. அந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே பறந்து கொண்டு இருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தாக கூறப்படுகிறது. இதனால் ராணுவ ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது விபத்துக்குள்ளானது. கிழே விழுந்ததில் ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்தாக தகவல் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள், வீரர்கள் உட்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் மீட்புப்படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். மேலும் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் படுகாயம் அடைந்து கவலைகிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார். விபத்துக்குள்ளான இடத்தில் மீட்கப்பட்ட ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர் மீட்கப்பட்டு, வெலிங்கடன் இராணுவ மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்தோருக்கு சிகிச்சை தர சிறப்புக்குழு நீலகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஆய்வு மேற்கொள்ள, விமான படை தளபதி வி.ஆர்.சவுத்ரி சூலூர் விமான படை தளத்திற்கு வந்துள்ளார். மேலும் டெல்லியில் உள்ள முப்படை தலைமை தளபதி பிபின் ராவ்த் வீட்டிற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றார். முன்னதாக இந்த விபத்து குறித்து மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடியிடம் விபத்து குறித்தான தகவல்கள் மற்றும் தற்போதைய நிலைமை போன்றவை எடுத்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட இன்று மாலை செல்கிறார். சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஹெலிகாப்டர் கருப்புபெட்டியின் பதிவுகளை வைத்தே விபத்துக்கான காரணத்தை கண்டறிய முடியும் என்பதால் கருப்பு பெட்டியை தேடும் பணியில் இராணுவத்தினர் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் மேட்டு பாளையம் குன்னூர் சாலை ராணுவத்தினர் கட்டுபாட்டில் உள்ளது. அந்த சாலையில் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.