விராலிமலை பகுதியில் உள்ள மளிகை கடையில் அதிகளவில் கள்ள 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தால் இருக்கின்றன.
கடந்த மாதம் 8–ஆம் தேதி நள்ளிரவு முதல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் புதிதாக வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கும் சில்லரை கிடைக்காமல் பெரும்பாடு படுகின்றனர். இதன் காரணமாக நாடு முழுவதும் 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்திலும் சில்லரை நோட்டுகளுக்கு அதிக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் விராலிமலையில் உள்ள மளிகை கடைகளில் கடந்த சில வாரங்களாக அதிக அளவில் கள்ள 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளதாகவும், குறிப்பாக விராலிமலையில் உள்ள ஒரு மளிகை கடையில் வியாழக்கிழமை மட்டும் 4 கள்ள 10 ரூபாய் நாணயங்களை கொடுத்து மளிகை பொருட்களை வாங்கி சென்றதாகவும் வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நாணயங்களை வங்கிக்கு எடுத்து சென்று மாற்ற முயன்றபோது அது கள்ள நாணயங்கள் என்று வங்கி ஊழியர்கள் கூறியதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
விராலிமலை பகுதியில் கள்ள 10 ரூபாய் நாணயங்கள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கேட்டுக் கொண்டனர்.
