Appointed graduate teachers - Teacher Examination Board reported
2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்த பட்டியல் நாளை வெளியிடப்பட்ட உள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர் பணி நியமனம் செய்யப்படவுள்ளது.
இதன் மூலம் 286 பட்டதாரி ஆசிரியர்கள், 623 பின்னடைவு பணியிடங்கள் மற்றும் 202 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர், தகுதித் தேர்வு 2012, 2013 மற்றும் 2014ல் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தகுதி பெற்றவர்களை கொண்டு நிரப்பப்பட உள்ளன.
இந்நிலையில் ஏற்கெனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம் பெற்றவர்கள், ஏற்கனவே தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்கள், பிஎட் பயின்ற ஆண்டே ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி அந்த கல்வி ஆண்டில் பிஎட் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் போது பணித் தெரிவுக்கு உரிய தகுதி பெறாமல் தற்போது தகுதி பெற்றவர்கள் ஆகியோர் மீண்டும் வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
எனவே ஆசிரியர் தகுதித் தேர்வு 2012, 2013 மற்றும் சிறப்பு தகுதித் தேர்வு 2014ல் (தாள் 2) தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.nic.in மார்ச் 10ல் வெளியிடப்படுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2ன் பதிவு எண் மற்றும் பிறந்த நாள் விவரம் பதிந்து விவரங்கள் அறியலாம். தங்கள் அசல் விவரங்களின் மூலம் இணையதளத்தில் விவரங்களை சரி பார்த்து புகைப்படம் மற்றும் கையொப்பம் இட்டு உறுதிச் சான்று அளிக்க வேண்டும்.
இந்த விவரங்களை நாளை காலை 10 மணி முதல் 20ம் தேதி இரவு 10 மணி வரை இணையதளத்தில் சரிபார்த்து திருத்தம் தேவையெனில் ஆன்லைனில் மேற்கொள்ளலாம்.
