விடைத்தாள் மறுமதிப்பீடு ஊழல் விவகாரம்… அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அதிரடி நீக்கம் !!
விடைத்தாள் மறுமதிப்பீடு ஊழல் விவகாரம்… அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அதிரடி நீக்கம் !!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்கள் மறு மதிப்பீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் அண்மையில் அம்பலமானது. தேர்வில் தோல்வி அடைந்த மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களிடம் பல ஆயிரம் ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு கூடுதல் மதிப்பெண் வழங்கியிருப்பது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தீராத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், விடைத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல் நடந்திருப்பதும், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 400 கோடி ரூபாய் லஞ்சமாக கை மாறி இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து ஊழல் தடுப்புத் துறை மற்றும் கண்காணிப்புத் துறையின் சென்னை சிறப்புப் பிரிவினர் அதிரடியாக செயல்பட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசனுக்கும் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதையடுத்து பதிவாளராக இருந்த கணேசன் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா பிறப்பித்தார்.
மேலும் கணேசனுக்குப் பதிலாக அண்ணா பல்கலைக்கழக பததிவாளராக ஜெ.குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.