சென்னையில் அமைதி பேரணி நடத்திய ஆர்எஸ்எஸ் அமைப்பினரை திமுக அரசு கைது செய்ததற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியுள்ளார்.
அமைதி பேரணி சென்ற ஆர்எஸ்எஸ் அமைப்பினரை கைது செய்திருப்பது திமுக அரசின் காழ்ப்புணர்ச்சியைக் காட்டுவதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கைது செய்தவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியறுத்தி இருக்கிறார்.
இது தொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"சென்னை போரூரில் அமைதி வழியில் பேரணி நடத்திய ஆர்எஸ்எஸ் அமைப்பினரை திமுக அரசின் காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்யும் குற்றவாளிகளும், முதியோர்களை கொலை செய்யும் கொலையாளிகளும் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருப்பதை கண்டுகொள்ளாத திமுக அரசு, தங்கள் அமைப்பின் 100வது ஆண்டு நிறைவை குறிக்கும் விதமாக அமைதி பேரணி சென்ற ஆர்எஸ்எஸ் அமைப்பினரை கைது செய்திருப்பது காழ்ப்புணர்ச்சியே அன்றி வேறென்ன?
பேரணிக்கு தடை விதிக்க முயற்சி
இதுமட்டுமன்றி, கடந்த ஆண்டும் இதே போல ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணிக்கு தடை விதிக்க எல்லா வழியிலும் முயற்சித்த திமுக அரசுக்கு குட்டு வைத்த மாண்புமிகு உயர்நீதிமன்றம், வருங்காலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணிக்கு அனுமதி மறுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டது. அதையும் மீறி காவல்துறை கைது செய்திருப்பது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலாகவே உள்ளது.
அரசியல் விளையாட்டு
இனியும் இதுபோன்ற, சிறுபிள்ளைத்தனமான அரசியல் விளையாட்டுகளை திமுக அரசும், காவல்துறையும் தவிர்க்க வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்."
இவ்வாறு அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
