Anganwadi Workers Demonstration in thiruchi

திருச்சி

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு புதுச்சேரி அரசு வழங்குவது போல் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் திருச்சி மாவட்டச் செயலாளர் சித்ரா தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் தமிழ் செல்வி, சீதா லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் ரெங்கராஜ், செயலாளர் சம்பத், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் சாவித்திரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

"அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு புதுச்சேரி அரசு வழங்குவது போல் இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியத்தை வழங்கி, காலமுறை ஊதியத்திற்குள் கொண்டு வரவேண்டும்,

ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்கப்படவேண்டும்,

1–1–2016 முதல் ஊதியக்குழு நிலுவை தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும்,

மே மாதம் கோடை விடுமுறை வழங்கப்பட வேண்டும்" போன்ற கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான அங்கன்வாடி பணியாளர்கள் சீருடையுடன் பங்கேற்றனர்.