Amrutha interview

ஜெயலலிதாவை இதுவரை நான் பெரியம்மா என்றுதான் நினைத்திருந்தேன் என்றும், இவ்வளவுநாள் மூடி மறைத்து வளர்க்கப்பட்டதாகவும், குடும்ப உறுப்பினர்கள் கூறியதை அடுத்து தான் வழக்கு தொடர்ந்ததாகவும் மஞ்சுளா (எ) அம்ருதா கூறியுள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த மஞ்சுளா (எ) அம்ருதா உச்சநிதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தான், ஜெயலலிதாவின் மகள் என்றும், இதனை நிரூபிப்பதற்கு எனக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து, டிஎன்ஏ சோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ள மஞ்சுளா, ஜெயலலிதாவின் உடலுக்கு வைஷ்ணவ ஐயங்கார் முறைப்படி இறுதிச்சடங்கு நடத்தப்படவில்லை என்பதால் வைஷ்ணவ ஐயங்கார் முறைப்படி அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய
அனுமதிக்க வேண்டும் என்றும் அம்ருதா தனது மனுவில் கூறியுள்ளார். 

மேலும் அந்த மனுவில் 1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி ஜெயலலிதாவின் மகளாக பிறந்தேன். ஜெயலலிதாவின் அத்தை ஜெயலட்சுமி தான் பிரசவம் பார்த்தார். ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதற்காக இந்த உண்மை வெளிப்படுத்தப்படவில்லை என கூறியுள்ளார்.

எனது வளர்ப்பு தாயான ஜெயலலிதாவின் சகோதரி ஷைலஜா 2015 ஆம் ஆண்டு இறந்து விட்டார். வளர்ப்பு தந்தையான சாரதி இந்த ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி இறந்து விட்டார். இவ்வாறு அம்ருதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அம்ருதாவின் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அம்ருதாவின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்தனர். பெங்களூரு நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், மஞ்சுளா (எ) அம்ருதா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர். ஜெயலலிதா தான் என்னுடைய அம்மா என்று உறவினர்கள் கூறியதாகவும் அதனைத் தொடர்ந்து வழக்கு தொடர்ந்ததாகவும் கூறினார். 

ஜெயலலிதாவை நான் இதுவரை பெரியம்மா என்றுதான் நினைத்திருந்தேன். எனது வளர்ப்பு பெற்றோர் இறந்து விட்டதை அடுத்து, குடும்ப உறுப்பினர்கள் கூறியதால் நான் வழக்கு தொடர்ந்தேன் என்றார்.

ஜெயலலிதா அம்மா, என் மீது மிகவும் பிரியமாக இருந்தார்கள் என்று கூறினார். என்னை மூடி மறைத்து வளர்த்துள்ளார்கள் என்றும், தான் உரிமை கொண்டாட வரவில்லை என்றார்.