All state buses running in Tamil Nadu are outdated
தமிழகத்தில் இயங்கும் பேருந்துகளில் 70% பேருந்துகள் காலாவதியானவை, பராமரிப்பின்றி அவற்றை இயக்குவது ஆபத்து என சிஐடியூ மாநில பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி, போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனால் நேற்று முன் தினம் முதல் போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 85 சதவீதம் பஸ்கள் இயங்காததால் போக்குவரத்து அடியோடு முடங்கியது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று சென்னை உயர்நீதிமன்றம் போக்குவரத்து ஊழியர்களை பணிக்கு திரும்புமாறும் இல்லையென்றால் பணிநீக்கம், இடைநீக்கம் செய்யப்படுவீர்கள் என எச்சரித்தது.
ஆனாலும் சட்டப்படி சந்தித்து கொள்வோம் என கூறி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே போக்குவரத்து பிரச்சனையை எதிர்கொள்ள தமிழக அரசு தற்காலிக ஓட்டுனர்களை வைத்து பேருந்துகளை இயக்கி வருகின்றன. இதற்கும் ஆங்காங்கே போக்குவரத்து ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை பெரம்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிஐடியூ மாநில பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார், தொழில்நுட்ப ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பேருந்துகள் பராமரிப்பின்றி இயக்கப்படுகின்றன எனவும் தமிழகத்தில் இயங்கும் பேருந்துகளில் 70% பேருந்துகள் காலாவதியானவை, பராமரிப்பின்றி அவற்றை இயக்குவது ஆபத்து எனவும் தெரிவித்துள்ளார்.
உத்தரவு கிடைத்தவுடன் 8ம் தேதி உயர்நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு விளக்கம் அளிப்போம் என ஆறுமுக நயினார் தெரிவித்துள்ளார்.
