100 நாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்தி வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் சாலை மறியல்...
திருச்சி
திருச்சியில், 100 நாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்தி கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று விவசாய தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றியம் பேரூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு 100 நாள் திட்டத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக பணிகள் வழங்கப்படவில்லை. மேலும், இந்தத் திட்டத்தில் ஏற்கனவே செய்த வேலைகளுக்கும் இதுவரை கூலி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், "100 நாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்தி கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
தங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை சரிசெய்ய வேண்டும்" என்றும் அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த பேரூர் கிராமத்தை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் முசிறி - துறையூர் சாலையில் ஜெம்புநாதபுரத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி தாசில்தார் கருணாநிதி, முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் காவலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, மக்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதியளித்தனர். இதனையடுத்து விவசாய தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.