காவிரி வல்லுநர் குழு அமைக்க மீண்டும் எதிர்ப்பு... - கர்நாடகா அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு...!!!
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி வல்லுநர் குழு அமைக்க கர்நாடக அரசு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் ஏற்கனவே பல வருடங்களாக தண்ணீர் பிரச்சனை இருந்து வருகிறது. கர்நாடக அரசு விடும் கொஞ்சம் நஞ்சம் காவிரி நீரும் மிகவும் மாசுபட்டு வருகிறது.
இதனிடையே பெங்களூர் மாநகரிலிருந்து தினமும் 1,482 லிட்டர் கழிவுநீர் காவிரியில் கலப்பதாக கர்நாடக சட்டப்பேரவையில் விவாதம் நடந்தபோது அம்மாநில சிறு பாசனங்கள் துறை அமைச்சர் சிவராஜ் தாங்கடாகி கூறினார்.
இதை ஆதாரமாக வைத்து தமிழக அரசு கர்நாடக அரசின் மீது வழக்கு தொடர்ந்தது.
அப்போது, காவிரியில் கலக்கும் கழிவுகளை சுத்திகரிக்க கர்நாடக அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.
மொத்த கழிவுகளில் சுமார் 15 முதல் 20 சதவீதம் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது.
இந்த அபாயகரமான கழிவுகளைத் தாங்கிக்கொண்டு தமிழகத்துக்கு வரும் காவிரி தண்ணீரில் விளையும் பயிர்களில் துத்தநாகம், ஈயம், காட்மியம், செம்பு போன்ற வேதிப்பொருள்களின் தன்மை அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளன.
எனவே இதைத் தடுக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இதையடுத்து காவிரியில் கழிவுநீர் கலக்கும் விவகாரம் குறித்து விசாரிக்க வல்லுநர் குழுவை அமைக்கலாமா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில், கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
தண்ணீர் பற்றாக்குறைக் காலத்தில் நீரை எவ்வாறு 4 மாநிலங்களுக்கு பங்கிட்டுக் கொள்ளலாம் என்று கர்நாடகம் தனது கருத்தைத் தெரிவிக்குமாறு மத்திய அரசு கேட்டதால் அனைத்துக்கட்சிகளுடனான ஆலோசனைக்கு சித்தராமய்யா ஏற்பாடு செய்தார்.
இதில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி வல்லுநர் குழு அமைக்க கர்நாடக அரசு மீண்டும் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளது. மேலும், அரசின் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஃபாலிநாரிமன் ஆலோசனை படி செயல்பட இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.