இரண்டு வருடங்களுக்குப் பிறகு விருதுநகரில் நல்ல மழை; நீர்வரத்து அதிகரித்ததால் விவசாய பணிகள் தீவிரம்…
விருதுநகர்
விருதுநகரில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு நல்ல மழை பெய்துவருவதால் கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள், விவசாயப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக மழை பெய்யாமல் வறட்சி நிலவி நிலையில் கடந்த சில நாள்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் வறண்டுக் கிடந்த கண்மாய்களுக்கு நீர் வரத் தொடங்கியுள்ளது.
காரியாபட்டி பகுதியில் முடுக்கன்குளம், அல்லாளப்பேரி, சத்திரம் புளியங்குளம், சிருகுளம் ஆகிய இடங்களில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதேபோல தாயில்பட்டி பகுதியில் வெற்றிலையூரணை பெரிய கண்மாய், வல்லம்பட்டி கண்மாய், விஜயகரிசல்குளம் பாண்டியன்குளம், செவல்பட்டி பாலாறு கண்ட ஐயனார் கண்மாய், சிப்பிபாறை கண்மாய் ஆகியற்றுக்கு தண்ணீர் வந்துள்ளன.
வடகரை, கீழாண்மறைநாடு ஆகிய கிராமங்களில் உள்ள ஊருணிகள் நிரம்பியுள்ளன. மேலாண் மறைநாடு கண்மாயில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில் அதில் உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் வெள்ளப்பாண்டி ஊழியர்களுடன் அங்குச் சென்று மணல் மூடைகளை அடுக்கி தண்ணீர் வெளியேறாத வகையில் நடவடிக்கை எடுத்தார்.
கண்மாய்களுக்கு நீர்வந்துள்ளதை தொடர்ந்து விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. நெல் நாற்று பாவும் பணிகளும் எள், கடலை பயிரிடும் பணிகளும் நடந்து வருகின்றன. தற்போதுள்ள தண்ணீர் 30 நாள்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தாலும் வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் களமிறங்கி உள்ளனர்.