ரசாயனம் கலந்தால் கடும் நடவடிக்கை…தனியார் பால் நிறுவனங்களுக்கு எடப்பாடி எச்சரிக்கை…
ரசாயனம் கலந்தால் கடும் நடவடிக்கை…தனியார் பால் நிறுவனங்களுக்கு எடப்பாடி எச்சரிக்கை…
பாலில் ரசாயனம் கலப்படம் செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளாதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்கள் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் பொதுமக்கள் தனியார் பாலை பயன்படுத்துகின்றனர்.
டீ கடை, ஓட்டல்களில் ஆவின் மற்றும் தனியார் பால் பயன்படுத்தப்படுகிறது. தனியார் நிறுவன பால் கெடாமல் இருக்க ரசாயனம் கலப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், ஆர்வலர்களும் பாலில் கலப்படம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனிடையே பாலில் ரசாயனம் கலப்பதாக 20 நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் சாம்பிள்கள் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று கூறினார். மேலும், 2 ஆய்வகத்தில் இருந்து பால் கலப்படம் குறித்த முடிவுகள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்தித்து ஈது குறித்து விளக்கம் அளித்தார். இதனையடுத்து பாலில் யார் கலப்படம் செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.