மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்த கோரிக்கைகளுக்கு 15 நாள்களுக்குள் நடவடிக்கை - அமைச்சர் அறிவுரை...
கரூர்
மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து வரும் கோரிக்கை மனுக்கள் மீது 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவுறுத்தினார்.
கரூர் மற்றும் தாந்தோன்றிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.
கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் அன்பழகன் தலைமை வகித்தார். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியது: "கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும். நீர் சேகரிப்பு மற்றும் நீருந்து நிலையங்களில் குறைந்த மின்னழுத்தம் உள்ள பகுதிகளை கண்டறிந்து மின்வாரிய அலுவலர்கள் உடனே சரிசெய்ய வேண்டும்.
குடிநீர் விநியோக குழாய்களில் ஏற்படும் கசிவுகள் மற்றும் அடைப்புகளை காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். மேலும், தெரு விளக்குகள் உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து வரும் கோரிக்கை மனுக்கள் மீது 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்க வேண்டும்" என்று அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மகளிர் திட்ட அலுவலர் பாலகணேஷ், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜ்மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சடையப்பன், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் செல்வராஜ், காளியப்பன், நெடுஞ்செழியன், ஜெயராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.