அன்புச்செழியன் மீது நடவடிக்கை தேவை! வெகுண்டெழும் பாஜக! தெருத் தெருவாக போஸ்டர்!
கந்து வட்டி கொடுமை காரணமாக இணை தயாரிப்பாளர் அசோக்குமாரின் இறப்புக்கு காரணமான பைனான்சியர் அன்புச்செழியனை கைது செய்ய வேண்டும் என்று மதுரையில் பாஜக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீது நடிகரும், இயக்குநருமன சசிகுமார், சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தனது உறவினரும், இணை தயாரிப்பாளருமான அசோக்குமார், கந்து வட்டி கொடுமை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பைனான்சியர் அசோக்குமாரின் டார்ச்சர் குறித்து அசோக்குமார் கைப்பட கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவான பைனான்சியர் அன்புசெழியனை தேடி வருகின்றனர்.
இதனால் அன்புசெழியனுக்கு எதிராக திரையுலகினர் கருத்து கூறி வருகின்றனர். அதேநேரத்தில் சினிமா துறையில் கந்து வட்டியை ஒழிக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனாலும், பைனான்சியர் அன்புச்செழியனுக்கு ஆதரவாக திரையுலகை சேர்ந்த சிலர் கருத்துக்களை கூறி வருகின்றனர். தயாரிப்பாளர் தாணு, இயக்குநர்கள் ராஜ்குமார், சீனு ராமசாமி உள்ளிட்ட பலர் ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பைனான்சியர் அன்புச்செழியன், முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட ஓரிரு நாட்களிலேயே மனுவை திரும்ப பெற்றார். தலைமறைவாகி உள்ள அன்புசெழியனின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை எதற்காக நடத்தப்படுகிறது என்பது தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஆனாலும், தலைமறைவாகி உள்ள அன்புசெழியன் இருக்கும் இடம் குறித்து துப்பு ஏதும் உள்ளதா என்பதன் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்துவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சினிமா பைனான்சியர் அன்புசெழியனை கைது செய்ய வேண்டும் என்று மதுரையில் பாஜக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், அன்பு செழியன் என்பதை அரக்கன் செழியன் என்று அச்சிடப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசே, காவல் துறையே, கொலையா? தற்கொலையா? என யோசிக்கையில் தீமைக்கும் நன்மை செய்து தற்கொலை செய்து கொண்ட திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் அவர்களின் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டி அரக்கர்கள் மீது நடவடிக்கை எடு என்று அந்த போஸ்டரில் அச்சிடப்பட்டுள்ளது.