மொபட் மீது லாரி மோதியதில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த பெண்; கணவன் காயம்; ஓட்டுநர் தப்பியோட்டம்...
திருவள்ளூர்
மொபட் மீது லாரி மோதியதில் இரத்த வெள்ளத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். அவருடைய கணவர் பலத்த காயம் அடைந்தார். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆரணி அத்திக்குளம் தெருவைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத் (55). இவர், சொந்தமாக கைத்தறி நெசவு செய்யும் தொழிற்சாலை வைத்துள்ளார். இவருடைய மனைவி கமலம்மாள் (48). இவர்களுக்கு திவ்யா (30) என்ற மகளும், திலீப் (28) என்ற மகனும் உள்ளனர்.
மகள் திவ்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் மகன் திலீப்புக்கு திருமணம் நடைப்பெற்றது. இந்த நிலையில் ஹரிபிரசாத் வீட்டின் வாஸ்து சரியில்லை என்று ஜோதிடர் ஒருவர் கூறியதால், ரூ.3 இலட்சம் செலவுசெய்து வீட்டின் கதவு உள்ளிட்ட பகுதிகளை சீரமைத்துள்ளார்.
இந்த நிலையில் தனது குடும்ப பிரச்சனைகள் குறித்து பேசி ஆறுதல் பெறுவதற்காக ஹரிபிரசாத், தனது மனைவி கமலம்மாளுடன் தனது குடும்ப நண்பரான குமரப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட காமாட்சி நகரில் வசித்து வரும் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரான குமார் என்பவர் வீட்டுக்கு நேற்று காலை மொபட்டில் சென்றார்.
பின்னர், மாலையில் இருவரும் ஆரணிக்கு புறப்பட்டனர். காமாட்சி நகரில் இருந்து பெரியபாளையம் - புதுவாயல் சாலையில் ஆரணி நோக்கி திரும்பினர். அப்போது புதுவாயலில் இருந்து பெரியபாளையம் நோக்கி சென்ற லாரி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் மொபட் மீது மோதியது.
இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட கமலம்மாள், தலையில் பலத்த காயம்பட்டு அதே இடத்தில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய ஹரிபிரசாத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
விபத்து நடந்தவுடன் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். இதில் மொபட்டின் முன்பகுதி நொறுங்கியது. பலியான கமலம்மாள் உடலை பார்த்து அவருடைய மகன் திலீப் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பெரியபாளையம் காவலாளர்கள், பலியான கமலம்மாள் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்த காவலாளர்கள் இதுபற்றி வழக்குப்பதிந்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.