A motor vehicle analyst arrested for bribing a fancy number Powder

சேலம்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சேலத்தில் மோட்டார் சைக்கிளுக்கு பேன்சி நம்பர் கொடுக்க ரூ.3800 இலஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளரை இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் பொடி வைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளகுந்தம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (45). இவர் சேலம் அருகே ஓமலூரில் மேச்சேரி பிரிவு சாலையில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வாளராக உள்ளார்.

இவர் புதிய மோட்டார் வாகன எண் பதிவுக்கும், விபத்து வண்டிகளுக்கு காப்பீடு தொடர்பான ஆய்வுக்கும் இலஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்தது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் புகையிலை நிறுவனத்தில் ஏரியா மேலாளராக பணிபுரிந்து வரும் ஓமலூரை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி (36) என்பவர் புதிதாக வாங்கிய புல்லட் மோட்டார் வாகனத்திற்கு பேன்சி பதிவு எண் கேட்டு ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமாரை தொடர்பு கொண்டுள்ளார்.

அதற்கு அவர் பேன்சி ரக ஒதுக்கீட்டில் பதிவு எண் வழங்க கூடுதல் கட்டணம் ஆகும் என்பதால், அவ்வாறு இல்லாமல் வழக்கமான நடைமுறையிலேயே ரேண்டம் ஒதுக்கீட்டில் பேன்சியான எண்ணை பெற்றுத் தருவதாகவும், அதற்கு இலஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஆனால், இலஞ்சம் கொடுக்க விரும்பாத ஜாபர் சாதிக் அலி இதுதொடர்பாக சேலம் இலஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமாரை பிடிக்க இலஞ்ச ஒழிப்பு காவலாளர்காள் நேற்று பகல் 12 மணியளவில் ஜாபர் சாதிக் அலியிடம், இரசாயன பொடி தடவிய 3800 ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

அவரும் ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு அந்தப் பணத்தைக் கொண்டுச் சென்று சிவக்குமாரிடம் கொடுத்தார். அப்போது, அந்த அலுவலகத்தில் மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரமௌலி மற்றும் காவலாளர்கள் கையும், களவுமாக சிவக்குமாரை கைது செய்தனர்.

பின்னர் அந்த அலுவலகத்தில் இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.