மாணவர் சூரஜ் ஏன் தாக்கப்பட்டார்? என்ன பிரிவுகளில் வழக்கு பாய்ந்தது? மனிஷ் யார்? - முழு விவரம்...
சென்னை ஐ.ஐ.டி. என்றால், உயர்கல்வி படிப்புகளுக்கும் பெயர் பெற்றது மட்டுமல்ல, பிரச்சினைகளுக்கும், போராட்டங்களுக்கும் பெயர் பெற்றது என்பதை அவ்வப்போது காட்டி வருகிறது.
ஏனென்றால், அங்கு ஏராளமான மாணவர்கள் குழுக்கள் செயல்பட்டு வருவதால், மாணவர்களின் கொள்ைககளுக்கும், சித்தாந்தங்களுக்கும் இடையே அவ்வப்போது கருத்து மோதல்களும், தாக்குதல்களும் நடப்பது இயல்பானது. ஆனால், மிகவும் அரிதாகவே வௌியில் தெரிகிறது.
துருவா மாணவர் வட்டம், வந்தே மாதரம் மாணவர் வட்டம், ஜெய்ஹிந்த் மாணவர் வட்டம், விவேகானந்தா குழு, ராமாயண பிரசார வட்டம், வசிஷ்டர் வட்டம், பெரியார் இணைப்பு குழு உள்ளிட்ட அங்கீகாரம் பெற்ற மாணவர்கள் அமைப்புகள் மட்டுமின்றி சில அங்கீகாரம் இல்லாத அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.
இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய மத்தியஅரசு தடை விதித்ததில் இருந்தே மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. பரபரப்பாகிவிட்டது.
மாட்டிறைச்சி திருவிழா
மத்திய அரசின் மாடு விற்பனைக்கு தடை உத்தரவில் இருந்து ஐ.ஐ.டி. வளாகம் சுறுசுறுப்படைந்தது. கடந்த 28-ந்தேதி இரவு ஐ.ஐ.டி. வளாகத்தில் அம்பேத்கர் -பெரியார் வட்டத்தை சேர்ந்த சூரஜ் என்பவர் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாட்டிறைச்சி திருவிழா நடத்தி, உண்டனர்.
யார் இந்த சூரஜ்?
இதில் சூரஜ் என்ற மாணவர் கேரள மாநிலம் மலப்புரம் மாவடத்தைச் சேர்தவர். ஐ.ஐ.டி.யில் ஏரோஸ்பேஸ் எஞ்சினியரிங் படிப்பில் ஆராய்ச்சி மாணவராக(பி.எச்டி) உள்ளார். அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்திலும் உறுப்பினராக சூரஜ் இருந்து வருகிறார்.
இந்த மாட்டிறைச்சி திருவிழா நடந்திய சம்பவம், புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் காட்டித்தீபோல் பரவியது. இதை சகிக்க முடியாத ஐ.ஐ.டியில் உள்ள இந்து வலது சாரி, சங்பரிவார் ஆதரவு பெற்ற ஏ.வி.பி.பி. மாணவர்கள் அமைப்பினர் எதிர்வினையாற்றினர்.
என்ன நடந்தது?
ஐ.ஐ.டி. விடுதியில் உள்ள உணவகத்தில் சூரஜ்சும், அவரின் நண்பரும் நேற்று நண்பகல் உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது ஓசன் எஞ்சினியரிங் பிரிவில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர் மணிஷ் குமார் சிங் என்பவர் சூரஜ்ஜை சந்தித்தார்.
அப்போது சூரஜ்ஜிடம் நீங்கள் தான் மாட்டிறைச்சி திருவிழா நடத்தினீர்களா? எனக்கேட்டுள்ளார். அதற்கு சூரஜ் பதில் அளிப்பதற்குள் மணிஷ்வுடன் வந்திருந்த 7-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சூரஜ்ஜை தாக்கினர். இதில் சூரஜ்ஜுக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.
என்ன பிரிவுகளில் வழக்கு?
இதையடுத்து சூரஜ் தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, விடுதிக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் ஐ.பி.சி. 147 பிரிவு, 341 பிரிவு, 323 பிரிவு, 506 பிரிவு ஆகியவற்றில் வழக்குப்பதிவு செய்து 9 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூரஜ் மீதும் வழக்கு
மேலும், மணிஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், சூரஜ் மீது ஐ.பி.சி. 324 பிரிவு, 321 பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.