72 விவசாயிகளுக்கு 51 இலட்சத்து 40 ஆயிரத்து 450 ரூபாய் பயிர்க்கடன்…
விக்கிரவாண்டி,
வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சியில் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 72 விவசாயிகளுக்கு பயிர் கடனாக 51 இலட்சத்து 40 ஆயிரத்து 450 ரூபாயை சட்டம், நீதி மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கத்தில் தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி சேலை மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு, சக்கரபாணி, உதவி ஆட்சியர் சரயு, கோட்டாட்சியர் ஜீனத்பானு, தாசில்தார் அருங்குளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக சட்டம், நீதி மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார். மேலும், விக்கிரவாண்டி வட்டத்தைச் சேர்ந்த 65 ஆயிரத்துக்கு 640 குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலை மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களை வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 72 விவசாயிகளுக்கு பயிர் கடனாக 51 இலட்சத்து 40 ஆயிரத்து 450 ரூபாயை வழங்கினார்.
விழாவில் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் சந்திரசேகரன், மண்டல துணை தாசில்தார் ஆனந்தகுமார், முன்னாள் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் இலட்சுமி நாராயணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் காமினி, முன்னாள் ஒன்றிய சேர்மன் சுமதி, ஒன்றிய விவசாய அணி இணைசெயலாளர் நாகப்பன், ஒன்றிய இளம்பெண் பாசறை பிருந்தா, ஒன்றிய செயலாளர் வேலு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ரேணுகாராஜவேல், குமாரராஜா, மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கரநாராயணன், கூட்டுறவு சங்க தலைவர் புருஷோத்தமன், கிளை செயலாளர்கள் ஐயனார், கலியபெருமாள், கல்யாணசுந்தரம் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.