40 people died of dengue
தமிழகத்தில் 40 பேர் நேரடி டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழந்ததாகவும், வகைப்படுத்தப்படாத காய்ச்சலால் 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதி வேகமாக பரவி வருகிறது. இதனால் தினந்தோறும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்டோர் அதிகளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால், அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாமல், நோயாளிகள் தரையில் படுக்க வைக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன.
டெங்குவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினாலும், டெங்கு நோயின் வேகம் அதிகமாகவே உள்ளது. ஆனாலும், டெங்கு நோய் விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்று தமிழக அரசு கூறி வருகிறது.
டெங்கு பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80-க்கும் மேற்பட்டோர் என்று கூறப்படுகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
சென்னை மற்றும் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு உள்ள பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொள்ள வந்தனர். டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில், தமிழக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னை மற்றும் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு உள்ள பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டதாக அவர் கூறினார்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அறிவுரைகளை மத்திய குழுவினர் வழங்கியுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். டெங்கு ஒழிப்புக்கு நிவாரண உதவியாக மத்திய அரசிடம் ரூ.256 கோடி தமிழக அரசு கேட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் 40 பேர் நேரடி டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழந்ததாகவும், வகைப்படுத்தப்படாத காய்ச்சலால் 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த 1840 சுகாதார ஆய்வாளர்கள் கூடுதலாக நியமிக்க உள்ளதாகவும் செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
