மர்ம காய்ச்சலால் 40-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; பேருந்து வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு செல்லமுடியாமல் கிராம மக்கள் அவதி...
விருதுநகர்
விருதுநகரில் உள்ள கிராமத்தில் 40-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டோரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல பேருந்து வசதி இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், அம்மன்கோவில்பட்டியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் கூலித் தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக இங்குள்ள 40-க்கும் மேற்பட்டோர் தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் குறையாததுடன், கை, கால் வீக்கம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால், குழந்தைகள் முதல் பெரியவர் வரை வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
காய்ச்சல் பாதித்தவர்கள் 8 கி.மீ. தொலைவில் உள்ள ஆமத்தூர் பகுதிக்கோ அல்லது 15 கி.மீ. தொலைவில் உள்ள விருதுநகருக்கோ சென்றுதான் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.
இதற்கு பேருந்து வசதியும் இல்லை. உதவிக்கு ஆள்களுன்ம் இல்லை. இதனால், பலர் சிகிச்சை பெற முடியாமல் வீட்டிலேயே படுத்துக் கிடக்கின்றனர். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டாலும், அது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பரவுகிறதாம். இதனால், வேலைக்குக் கூடச் செல்ல முடியாமல் இவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, அம்மன்கோவில்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.