35 percent of the Tamilnadu working in Tamilnadu are working - the size of the job ...
கோயம்புத்தூர்
தமிழகத்தில் பல்வேறு பணிகளில் 35 சதவீதம் வடமாநிலத்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆகவே, தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லை என்று கூற முடியாது என்று என்ஐஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் ம.மாணிக்கம் தெரிவித்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி மருத்துவர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் என்ஐஏ கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தின விழா நேற்று நடைப்பெற்றது.
இந்த விழாவுக்கு, என்ஐஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் ம.மாணிக்கம் தலைமை தாங்கினார். செயலாளர் இராமசாமி வரவேற்றார். கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஹரிஹரசுதன் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக சென்னை தமிழ் மையத்தின் நிறுவனர் ஜெகத் கஸ்பர் ராஜ் கலந்து கொண்டார். இதில், கொங்குநாட்டு சாதனையாளர் விருது சென்னை பிரிஷிசன் குழும நிறுவனங்களின் தலைவர் பாலசுப்பிரமணியத்துக்கு வழங்கப்பட்டது.
நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவர்களான தஞ்சாவூர் வருமான வரித்துறை உதவி ஆணையர் சுப்பிரமணியம், ஈரோடு மாநகராட்சி செயற்பொறியாளருமான விஜயகுமார் ஆகியோருக்கு ரத்தினங்கள் விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் என்ஐஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் ம.மாணிக்கம், "தமிழகத்தில் ஆண்டுக்கு 8 இலட்சம் பேர் பட்டதாரிகளாக உருவாகி வருகின்றனர். 1 இலட்சம் பேர் தொழிற்கல்வி முடிக்கின்றனர். ஆனால், மென்பொருள் போன்ற நிறுவனங்களில் 50 ஆயிரம் பேருக்கு மேல் பணி வழங்க முடியாது.
தமிழகத்தில் படித்துவிட்டு வேலைக்காக பல இலட்சம் பேர் காத்திருக்கின்றனர். ஆனால், வடமாநிலங்களில் இருந்து இலட்சக்கணக்கான இளைஞர்கள் தமிழகத்தில் வேலை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு பணிகளில் 35 சதவீதம் வடமாநிலத்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆகவே, தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லை என்று கூற முடியாது.
இளைஞர்கள் புது உத்தியுடன் தங்களுக்குப் பிடித்த தொழிலை செய்து முன்னேற வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், குமரகுரு பொறியியல் கல்லூரி இணைத் தாளாளர் சங்கர் வாணவராயர், கஸ்தூரிபாய் காதுகேளாதோர் மழலையர் பள்ளித் தலைவர் கௌரிமாணிக்கம், அபிராமி ஹரிஹரசுதன், ரூட்ஸ் நிறுவனத் தலைவர் ராமசாமி,
சிற்பி பாலசுப்பிரமணியம், பொறியியல் கல்லூரி இயக்குநர் ரங்காபழனிசாமி, நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மணிவண்ணன், வாணவராயர் வேளாண்மை கல்வி நிறுவனத்தின் முதல்வர் பாலுசாமி, என்ஐஏ பள்ளிகளின் நிர்வாக அலுவலர் சின்னச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதில் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி முதல்வர் இரத்தினவேலு நன்றி தெரிவித்தார்.
