3 lakh farmers siege Delhi coming 23rd
திருச்சி
விவசாய கடனை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வரும் 23-ஆம் தேதி முதல் டெல்லியில் மூன்று இலட்சம் விவசாயிகளைக் கொண்டு முற்றுகைப் போராட்டம் நடத்த விவசாய அமைப்புகளின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விவசாய கடனை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட 69 அகில பாரத விவசாய அமைப்புகள், டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.
அந்தப் போராட்டத்தை வெற்றியடைய செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாவட்டம், சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழகம் மற்றும் ராஜஸ்தான், கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாய அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், "விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
விவசாயிகள் வாங்கிய அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் வரை காலவரையற்ற முற்றுகை போராட்டத்தை நடத்தி, டெல்லியின் அனைத்து சாலைகளையும், 3 இலட்சம் விவசாயிகளை கொண்டு அடைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் திருச்சி மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து விவசாயிகளை பங்கெடுக்க செய்வது என்று கூட்டத்தில் உறுதி எடுக்கப்பட்டது.
இதில், ராஷ்ட்ரீய கிசான் மகா சங்க அமைப்பாளர் சந்வீர்சிங், கேரள மாநில ஒருங்கிணைப்பாளர் பிஜூ, தேசிய தன்மான இயக்கத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஐயாக்கண்ணு, உள்ளிட்ட விவசாய சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் ஐயாக்கண்ணு செய்தியாளர்களிடம், “ரூ.24 இலட்சம் கோடி மத்திய பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் இல்லை. எனவே, விவசாய கடனை தள்ளுபடி செய்யக் கோரி வருகிற 23-ஆம் தேதி முதல் டெல்லியின் அனைத்து சாலைகளையும் அடைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முடிவு எடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
