பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ், ரூ.1 இலட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் 269 சதுர அடியில் 1,902 வீடுகள் கட்ட ஏழு பேருக்கு அனுமதி ஆணைகளை ஆட்சியர் சிவஞானம் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் 2016–17–ஆம் ஆண்டு பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ், ரூ.1 இலட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் 269 சதுர அடியில் 1,902 வீடுகள் கட்ட ஒதுக்கீடு பெறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பயனாளிகள் 2011–ஆம் ஆண்டு சமூகப் பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பில் கணினி வாயிலாக உருவாக்கப்பட்ட தகுதியானவர்கள் பெயர் பட்டியலில் இருந்து தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மின்னணு முறையில் வேலை உத்தரவு வழங்கப்படுகிறது. முந்தைய ஆண்டுகளில் பயனாளிகளுக்குரிய உத்தரவு வட்டார வளர்ச்சி அலுவலர்களால் வழங்கப்பட்டது. இதில் காலதாமதம் இருந்தது.
ஆனால், தற்போதைய நடைமுறைப்படி பயனாளியின் புகைப்படம் மற்றும் முகவரி, ஆதார் எண் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட வேலை அடையாள எண், முன்னுரிமை எண், சமூக பொருளாதார சாதி வாரியான கணக்கெடுப்பு பட்டியல் எண், பயனாளி வீடு கட்டப்போகும் இடம், பண பரிவர்த்தனை அடையாள எண் ஆகிய விவரங்களுடன் வேலை உத்தரவு கணினியில் தானாகவே உருவாக்கப்பட்ட நாள் விவரத்துடன், மிகவும் வெளிப்படையான முறையில் கணினியில் உருவாக்கப்படுகிறது.
இந்த உத்தரவு கணினியிலிருந்து நகல் எடுக்கப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் கையொப்பத்துடன் பயனாளிகளுக்கு உடனடியாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசால் ரூ. 1 இலட்சத்து 20 ஆயிரமும் மாநில அரசால் ரூ.50 ஆயிரமும் பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
மின்னணு முறையில் வேலை உத்தரவு வேலை உருவாக்கப்படுவதால் இதற்கு முந்தைய காலங்களில் ஏற்பட்ட சிரமங்கள் வருங்காலங்களில் ஏற்படாது என்ற விவரம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இத்திட்டத்தின் கீழ், வீடு கட்ட விருதுநகர் மற்றும் சாத்தூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 7 பேருக்கு, ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு முறையில் கணினியில் தானாகவே உருவாக்கப்பட்ட அனுமதி ஆணைகளை ஆட்சியர் சிவஞானம் வழங்கினார்.
அப்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், செயற்பொறியாளர் நம்பிராஜன், வீடுகள் மற்றும் சுகாதார உதவி திட்ட அலுவலர் மல்லிகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் உடனிருந்தனர்.
