19 lakh voters in Thanjavur Women are too much The Shortlisted by the Collector ...

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட ஆட்சியர் மொத்த வாக்காளர்கள் 19 இலட்சம் பேர் என்றும், ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர் என்றும் அறிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் அண்ணாதுரை நேற்று வெளியிட்டார்.

அதன்பின்னர் அவர், தஞ்சாவூர் மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியவாறு, தஞ்சை மாவட்டத்தில் 3-10-2017 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்து 57 ஆயிரத்து 526 ஆண் வாக்காளர்களும், 9 இலட்சத்து 93 ஆயிரத்து 55 பெண் வாக்காளர்களும், 73 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 19 இலட்சத்து 50 ஆயிரத்து 654 வாக்காளர்களாகும்.

இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்திடக் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் மீது கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, தகுதி அடிப்படையில் புதிதாக 19 ஆயிரத்து 808 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் 9 ஆயிரத்து 339 ஆண் வாக்காளர்களும், 10 ஆயிரத்து 450 பெண் வாக்காளர்களும், 19 மூன்றாம் பாலினத்து வாக்காளர்களும் ஆவர்.

இறுதி வாக்காளர் பட்டியலின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 19 இலட்சத்து 15 ஆயிரத்து 848 ஆகும்.

இதில் 9 இலட்சத்து 40 ஆயிரத்து 970 ஆண் வாக்காளர்களும், 9 இலட்சத்து 74 ஆயிரத்து 786 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 92 பேரும் உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல் நகல் எட்டு சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மற்றும் தாலுகா அலுவலகங்கள், வருவாய் கோட்ட அலுவலகங்கள் ஆகியவற்றிலும் வாக்காளர்களின் பார்வைக்காக வைக்கப்படும்.

வருகிற 26-ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபை கூட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல், வாக்காளர்களின் பார்வைக்காக வைக்கப்படும்.

எனவே, அனைத்து வாக்காளர்களும், தமது பெயர் வாக்காளர் பட்டியலில் தவறேதுமின்றி இடம் பெற்றுள்ளதா? என்பதை வாக்காளர் பட்டியலைப் பார்வையிட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்" என்று ஆட்சியர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி, தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், தெற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முரசொலி, பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த கேசவன், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொருளாளர் பழனியப்பன்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி செல்வக்குமார், தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் சிவக்குமார், தேசியவாத காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கரிகால்சோழன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் செந்தில்குமார், தாசில்தார்கள் தங்கபிரபாகரன், ராமலிங்கம் மற்றும் பலர் பங்கேற்றனர்.