வேப்பனப்பள்ளி அருகே உள்ள கிராமத்தில் கொட்டகையில் தீப்பிடித்ததில் 15 ஆடுகள் கருகி பலியாயின. 10 ஆடுகள் தீக்காயத்துடன் உயிர் தப்பின. காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே மணவாரனப்பள்ளி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்ட கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டராமன் (55). இவர் ஒரு விவசாயி. ஆடுகள் வளர்க்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, இரவு தனது 25 ஆடுகளை கொட்டகையில் கட்டி விட்டு தூங்கச் சென்றுள்ளார்.

திங்கள்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஆடுகள் அலறியச் சத்தம் கேட்டதால் கோதண்டராமன் எழுந்துச் சென்று பார்த்தார். அப்போது கொட்டகை தீப்பிடித்து எரிந்துக் கொண்டிருந்தது.

இதை கண்டு அதிர்ச்சியில் உறைந்த கோதண்டராமன் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீரை ஊற்றித் தீயை அணைக்க கோதண்டராமனுக்கு உதவினர். ஆனாலும், 15 ஆடுகள் தீயில் கருகி இறந்து விட்டன. 10 ஆடுகள் தீக்காயத்துடன் உயிர் பிழைத்தன.

ஆட்டு கொட்டகைக்கு யாரேனும் தீ வைத்தார்களா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று தெரியவில்லை.

இது குறித்து வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.