குடத்துக்குள் ‘தலை’ மாட்டிக் கொண்டு தவித்த ‘நாயை மீட்ட’ போலீசார்... டுவிட்டரில் போலீஸ் கமிஷனருக்கு குவியும் வாழ்த்துகள்..
பிளாஸ்டிக் குடத்துக்குள் தலையை விட்டு மாட்டிக்கொண்டு எடுக்கமுடியாமல் தவித்த நாயை, 15-க்கும் மேற்பட்ட போலீசாரை அனுப்பி வைத்து மீட்க போலீஸ் கமிஷனர் உதவியுள்ளார்.
நாயை பத்திரமாக மீட்டு, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த பெங்களூரு கமிஷனர் அபிஷேக் கோயலுக்கு டுவிட்டரில் வாழ்த்து குவிந்து வருகிறது.
பெங்களூரு நகர போலீஸ் துணை கமிஷனராக இருப்பவர் அபிஷேக் கோயல். இவர் நேற்றுமுன்தினம் தனது அலுவலகத்துக்கு காரில் சென்றார். அப்போது தனது அலுவலகத்துக்கு அருகே ஒரு நாய் சிறிய பிளாஸ்டிக் குடத்துக்குள் தலையைவிட்டு, எடுக்குமுடியாமல் தவித்துக் கொண்டு இருந்தது.
பிளாஸ்டிக் குடத்துடன் அங்கும், இங்கும் அலைந்து திரிந்து கொண்டு இருந்தது. இதைப் பார்த்த போலீஸ் துணை கமிஷனர் கோயல், தனது அலுவலகத்துக்குசென்று, 15 பேர் கொண்ட போலீசாரை அனுப்பி வைத்து நாயை மீட்ட உத்தரவிட்டார்.
இதையடுத்து, அங்கு சென்ற 15 போலீசாரும் நாயைத் தேடிக்கண்டுபிடித்து, முதலில் நாய் சுவாசிக்க குடத்தில் துளையிட்டனர். அதன் பின் இரும்பு அறுக்கும் ‘பிளேடு’ மூலம் குடத்தின் ஒவ்வொரு பகுதியாக அறுத்து நாயை பத்திரமாக மீட்டனர். இதில் நாய்க்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டு இருந்ததையடுத்து, அதை கால்நடைமருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
இந்த சம்பவங்கள் அனைத்தையும், கமிஷனர் கோயல் புகைப்படமாக டுவிட்டரில் வெளியிட்டு, நாய் மீட்கப்பட்டதை தெரிவித்து இருந்தார்.டுவிட்டரில் இந்த புகைப்படங்களைப் பார்த்த ஏராளமானோர் போலீஸ் கமிஷனரின் மனிதநேய செயலுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.